Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாட்டில் ஊரடங்கு மீறல் வழக்கு: ரூ.5 கோடியை தாண்டியது அபராதம்!

மே 16, 2020 07:20

சென்னை: “ஊரடங்கு உத்தரவை மீறியதாக மே 14ம் தேதி வரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.5 கோடியை தாண்டியுள்ளது,” என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை உள்ளிட்ட விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 17ம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்புக்கு தகுந்தவாறு சில தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தின் போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பின்பற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை சில தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை உள்ளிட்ட விவரங்களை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊரடங்கு உத்தரவை மீறியதாக மே 14ம் தேதி வரை 4,41,888 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,68,513 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 3,86,573 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4,41,888 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதத் தொகையாக ரூ.5,43,88,379 என வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்